Thursday, July 05, 2007

நுழைவு தேர்வும் - முடிவும்

ப்ளாக் போட்டு ரொம்ப நாளாகுதா, கை பர பரனு வருது சும்மாவா சொன்னாங்க ப்ளாக் எழுதினவங்க கை சும்மா இருக்காதுனு.

ப்ளாக்ல் IP address and date தெரியப்படுத்தும் நிரல் கிடைத்தது பிறகென்ன உடனேயே வார்ப்புருவில் போய் copy paste பண்ணுவது தானே நமது வேலை. ஆனாலும் preview பார்க்கும் வரை பயம் தான் எங்கே எப்படி காண்பிக்குமோ என்று.

Preview ஒழுங்காக வந்தது பிறகென்ன முதல் வரியை மறுபடியும் படிக்கவும்.

Bloggerல் கணக்கு தொடங்கும் முன்பே wordpressல் அது என்ன என்று தெரியாமலே ஒரு கணக்கை வைத்து இருந்தேன். Bloggerல் பதிவை போட்டவுடன் தான் தெரிந்து கொண்டேன் wordpressலும் இதே போல் பதிவை போடலாம் என்று.

அப்புறம் வழக்கம் போல் நகலெடுத்து wordpressல் ஒட்டி wordpressக்கு ஒரு இணைப்பையும் Bloggerல் கொடுத்து வைத்தேன். சுட்டியை இணைப்பில் சொடுக்கினால் ஆவ்!! அது wordpressக்கு கொண்டு போய்விடுகிறது இது வெற்றிகரமாக வந்தவுடன் சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

முன்பு ஒருமுறை இப்படிதான் ஒரு நிரலை நகலெடுத்து ஒட்டி preview பார்த்தால் மொத்த விஷயமும் இடம் மாறி பார்க்கவே unsakikableஆ இருந்தது அதிலிருந்து இந்த preview பார்த்து அது ஒழுங்காக தெரியும் வரை வயிற்றில் ஜில் தான்.

ப்ளாக் வார்ப்புருவில் நல்ல திறன் உள்ளவர்கள் எங்கே edit செய்தால் எந்த இடத்தில் நமது நிரலின் பலன் தெரியும் என்று பின்னூட்டத்தில் வந்து தெளிவுப்படுத்தினால் உதவியாக இருக்கும்.

இதெல்லாம் ப்ளாக் பார்த்தாலே தெரியுதே அப்புறம் ஏன் எழுதணும்னு கேட்க தோணுதா?.
இருக்கு காரணம் இருக்கு.

மகனின் பள்ளி சேர்க்கைகாக (வகுப்பு 1) ஒவ்வொரு பள்ளியாக அலைய வேண்டியிருந்தது. வீட்டின் அருகில் இருக்கும் நல்ல பள்ளியில் சேர்க்கலாம் என்று போனால் அங்கு இடம் எல்லாம் நிரப்பப்பட்டிருந்தது. பிறகு இன்னொரு பள்ளியில் போய் கேட்டால் அங்கும் அதே பதில் தான், என்ன வம்பா போச்சுனு நினைச்சிட்டு இருக்கும் போது அந்த பள்ளிக்கு இன்னொரு கிளை இருக்கிறதாம் அங்கு வேண்டுமானால் போய் கேட்டு பார்க்க சொன்னார்கள். சரி இந்த அளவுக்காவது செய்தி சொன்னார்களே என்று நன்றி சொல்லி விட்டு 2 கீமீ தள்ளி இருந்த அந்த பள்ளிக்கு சென்றோம்.

அங்கு வாசலில் ஒரு அறிவிப்பு பலகையில் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை எழுதி வைத்திருந்தனர். வகுப்பு 1ன் மொத்த மாணவர் எண்ணிக்கை 251. அப்போதே கொஞ்சம் பயம் வந்தது. பிறகு வரவேற்பறையில் இருந்தவரிடம் போய் வகுப்பு 1ல் சேர்க்க வந்திருக்கிறோம் என்று சொன்னவுடன் ஒரு விண்ணப்ப கடிதம் எழுதி தருமாறு சொன்னார். எழுதி கொடுத்தவுடன் அதை முதல்வரிடம் அனுப்பி வைத்தார். வழக்கம் போல் முதல்வர் என்ன சொல்ல போறாரோ என்று காத்திருந்தோம் ஏறக்குறைய 15 நிமிடம் கழித்து வரவேற்பாளர் பெயர் சொல்லி அழைத்து சேர்க்கை விண்ணப்ப படிவம் பணம் கட்டி வாங்க சொன்னார். அப்போது தான் நிம்மதி வந்தது.

விண்ணப்பம் வாங்கியதும் நிரப்பிய படிவத்துடன் பிறப்பு சான்றிதல் இணைத்து அடுத்த நாள் வந்து கொடுக்க சொன்னார்.

மறுநாள் பூர்த்தி செய்த படிவத்தோடு பிறப்பு சான்றிதலையும் இணைத்து பள்ளிக்கு சென்றோம். மகனிடம் ஏற்கனவே பள்ளியில் நேர்காணல் இருக்கும் கேள்வி கேட்டால் தயங்காமல் பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லியிருந்தோம், அவனோ பார்த்துக்கலாம் என்பது போல் ஒரு பார்வையை பதிலாய் தந்தான்.

பள்ளிக்கு சென்று விண்ணப்ப படிவம் கொடுத்தவுடன் சிறிது நேரம் கழித்து ஒரு நேர்முக தேர்வு எழுத வேண்டியது உள்ளது இன்று எழுதிகிறீர்களா அல்லது நாளை எழுதிகிறீர்களா என்று கேட்டார்கள். நாங்கள் இதை எதிர் பார்க்கவில்லை அதனால் பென்சில் எரேசர் எதுவும் எடுத்து செல்லவில்லை பிறகு அவரிடமே பென்சில் கேட்டு வாங்கி eraser கொண்டு வராத காரணத்தால் மகனிடம் எந்த கேள்விக்கும் முடிந்த வரை அழிக்காமல் சரியாக பதில் எழுதுமாறு சொல்லி அனுப்பி வைத்தோம்.

அரை மணி நேரம் கழித்து தேர்வு எழுதி முடித்துவிட்டு வந்தபின் மகனிடம் கேட்டேன் தேர்வு எப்படி என்று. அது தான் பேப்பர் தருவாங்க இல்லை அப்ப தெரிய போகுது என்று பதிலளித்தான்.

பள்ளி வரவேற்பாளர் அடுத்த நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முடிவை தெரிந்து கொள்ள சொன்னார்.

வரும் வழியெல்லாம் இதையே சொல்லி கொண்டு வந்தேன் முதலிலேயே சொல்லி இருந்தால் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு வந்திருக்கலாமே என்று. மகனோ தேர்வில் எல்லாம் சுலபமாக இருந்தது என்று சொன்னான். இருந்தாலும் இன்னும் ஒரு நாள் காத்திருக்கனுமே என்று வழக்கம் போல் பொறுமைக்கு spelling தெரியாமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் ஒரு பதினைந்து நிமிடம் கழித்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, பள்ளியிலிருந்து தான் மகன் தேர்வில் தேர்வாகிவிட்டான் என்றும் மறுநாள் வந்து பள்ளி கட்டணம் செலுத்துமாறு கூறினார்கள்.

கேட்டவுடன் சந்தோஷத்துக்கு அளவேயில்லை.

ஏன் இந்த பதிவு? என்ன சொல்ல வரேன்?
விடை இதுதான் பள்ளி நுழைவு தேர்வு எழுதப்போன மகனே தைரியத்தோடு போய் எழுதிவிட்டு வந்தான். இவ்வளவுக்கும் முந்தின நாள் ஜீரம் வேறு. ஆனால் நானோ ஒரு நிரலை நகலெடுத்து ஒட்டி preview பார்ப்பதற்குள் போதும் படும் அவஸ்தை….


ஏன் இந்த பள்ளி சேர்க்கை? ஏன் இந்த அலைச்சல்? பதில் அடுத்த பதிவில்.

சந்திப்போமா.